குடும்பத்தில் அவ்வப்போது பணம் வருகின்றது; வந்த பணமும் பல வகைகளில் செலவாகிக்கொண்டே இருக்கின்றது. ‘வரவும் நமக்குத் தெரிந்தே வருகிறது; செலவும் நமக்குத் தெரிந்தே போகிறது. இதில் கணக்கு என்ன?’ என்று விட்டேற்றியாக இருப்பது, பொருள் வரவுக்குத் தடையாகிவிடுகின்றது. வரவு, செலவுகளைக் குறித்துக் கணக்கு எழுதும்பொழுது, நம்முடைய கவனம் முழுதுமாகப் பணத்தில் ஈடுபாடு கொள்கின்றது. இந்தக் கவனம் மிகவும் முக்கியம். நாம் எந்த அளவிற்குக் கவனத்தைக் கொடுக்கின்றோமோ, அந்த அளவிற்குப் பொருள் நம்மைத் தேடித் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.
கடமைகள் பல பிரிவுகளை உடையன. அவை குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகள், நண்பர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், நம்மை அண்டியவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், பெரியோர்களுக்கும், நாட்டுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் எனப் பல வகைப்படுவன. அவரவர்க்கு அமைந்த கடமைகளைத் தவறாது செய்ய வேண்டும். ‘வேண்டும்’என்றே கடமைகளைச் செய்யாமல் விட்டுவிடுவது பெரும் தவறாகும்.
‘முறையான செலவு’ என்ற தலைப்பில் ‘எந்தப் பொருளையும் விரயம் செய்யக்கூடாது’என்று குறிப்பிட்டிருந்தேன். பொருளை அலட்சியமாகவும், சிறு நோக்கங்களுக்காகவும் செலவு செய்வது விரயமாகும். அப்படிச் செய்வது தவறு. அதைப் போலவே, நியாயமாகச் செலவு செய்ய வேண்டியதை முழுமையாகச் செலவு செய்யாமல், அரைகுறையாகச் செய்வதும் தவறு.
பல சந்தர்ப்பங்களில் நாம் நண்பர்களுக்கு உதவுகின்றோம்; அது போலவே அவர்களும் நமக்கு உதவுகின்றார்கள். நாம் கடன் பெறுகின்றோம்; கொடுக்கின்றோம். சில சமயங்களில் கணிசமான அளவில் கடன் கொடுக்கின்றோம். அதே போலக் கணிசமான பாக்கியையும் வசூல் செய்து விடுகின்றோம். சொற்பத் தொகையாக இருக்குமேயானால், அது கொடுக்கப்பட வேண்டியதாக இருந்தாலும், அதனை மறந்துவிடுகின்றோம். சில சமயங்களில் தொகை கணிசமாக இருந்தால்கூட அதை அலட்சியப்போக்காலோ அல்லது வேண்டும் என்றோ வசூல் செய்யாமல் இருந்துவிடுகின்றோம்; அல்லது வாங்கியதைத் திருப்பிக் கொடுக்காமல் இருந்துவிடுகின்றோம்.
‘பேச்சு’ என்பது மனிதனுக்குக் கிடைத்தற்கரிய ஒரு சிறந்த கருவியாகும். சாதாரணமாக, ‘பேச்சு’ என்பது, எண்ணங்கள் ஒலி வடிவமாக வெளிப்படுவதைக் குறிக்கின்றது.
கேட்டவை, பார்த்தவை, மற்ற புலன்களால் அறிந்தவை ஆகியயாவும் எண்ணங்களாக உருவெடுத்து நம் மனத்தில் இடம் பெறுகின்றன. நாம் இந்த எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்பொழுது, அது ஒலி வடிவம் பெற்றுப் பேச்சாக வெளிப்படுகின்றது.
‘பேச்சு என்றால் எண்ணங்களை வெளியிடும் ஓர் உபாயமேயன்றி வேறு இல்லை’ என்று பாமர மக்கள் கருதுகின்றார்கள். அதனால் அவர்கள், ‘பேச்சு கவனத்துக்குரிய ஒரு செயல்’ என்பதைப் புரிந்துகொள்வதில்லை.
பொருள்களைத் தூய்மையாகவும், சீராகவும் வைக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் பொருள்களை விரயம் செய்யாமல் இருத்தலும் ஆகும்.
உண்ணும்பொழுது தேவையான அளவு உணவைப் பெற்று, மிச்சம் வைக்காமல் உண்ண வேண்டும். உண்டியைத் தயாரிக்கும்பொழுது தேவையான அளவைக் கணக்கிட்டு ஆக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக உணவு மீதியாகிவிட்டால், அதை வீணாக்காமல் பசித்து வரும் எளியவர்க்குப் படைத்துவிட வேண்டும். பால், தயிர், எண்ணெய் போன்றவற்றைக் கவனக் குறைவால் கீழே கொட்டிவிடக்கூடாது. அதன் காரணமாக அவை கெட்டு விடுவதால் உபயோகப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. அதனைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டில் உள்ள எல்லாப் பொருள்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை வரிசைக்கிரமமாக அடுக்கி வைத்துக்கொள்வதும் அவசியம். நாம் கையாள்கின்ற பொருள்களை அசுத்தமாகவும், தாறுமாறாகவும் வைத்து இருந்தால், அவை அந்தப் பொருள்களைப் பெரிதும் பாதிக்கின்றன. அதன் காரணமாக அவை நமக்குப் போதிய பலனைத் தர விரும்புவதில்லை. அவற்றைத் தூய்மையாகவும், சீராகவும் வைத்துக்கொண்டால், அவை நமக்குப் பெரும் பலனைத் தருவதோடு, பன்மடங்காகப் பெருகவும் செய்கின்றன.
பொருட்செல்வம் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேறுவது கடினம். பொருள் இல்லாத வீடும், நாடும் சிறக்க முடியாது. ‘பொருட்செல்வம்’என்பது பொருளுக்கு அடிமைப்பட்டுச் சேமிக்கும் செல்வமன்று. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவைப்படுவதுதான் பொருட்செல்வம். அன்னையிடம் நம்பிக்கையும், பக்தியும் கொண்டு, அவரை இடையறாது சிந்தித்தும், வந்தித்தும் வாழ்க்கையை நடத்துகின்ற அன்பருக்கு உணவு, உடை, வீடு, ஆரோக்கியம், கல்வி ஆகியவை எந்த வகையாலும் தடைப்படாது கிடைத்தல் வேண்டும். ‘அதற்குத் தேவையான பொருட்செல்வத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்?’என்பதை இங்கே காண்போம்.
அன்பர்களுக்குத் தேவையானவை மூன்று. அவை: (1) நம்பிக்கை, (2) பக்தி, (3) இடையறாத தெய்வச் சிந்தனை. ‘நாம் வேண்டும் என்று கேட்டதைத் தவறாமல் கொடுக்கும் ஆற்றலுடையது அன்னையின் அருள்’ என உறுதியாக நம்புவது நம்பிக்கை. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அன்னையை மனத்தால் பணிந்து செய்வது பக்தி. மனத்தை எப்பொழுதும் அன்னையிடம் பதித்து வைத்திருப்பது இடையறாத தெய்வச் சிந்தனை. இந்த மூன்றும் செயல்படும் விதத்தை இங்கே பார்க்கலாம். செயல்கள் நிறைந்தது நம் வாழ்க்கை. செயல்கள் இரு வகைப்படும். ஒன்று, முடிவு செய்த ஒன்றை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் செயல்கள்; இரண்டு, நடைமுறையில் இயல்பாகச் செயல்படும் செயல்கள்.