அன்னைக்குப் பிரார்த்தனை செய்து பலன் அடைந்தவர்கள் பலர். சிறிய பிரச்சினைகள் தீர்ந்தாலும், பிரச்சினைக்கு உரியவர்கட்கு அது பெரு வியப்பாக இருக்கும். மற்றவர்கட்கு அது ஆச்சரியத்தைக் கொடுக்காது. காணாமல் போன மோதிரம் கிடைத்துவிட்டால் தொலைத்தவருக்கு அது பலன்; சந்தோஷம். ஒரு மோதிரம் ஒரு சவரனோ, அரைச் சவரனோ இருக்கலாம். அதை இழந்தவர் திரும்பிப் பெற்றதில் கேள்விப்படுபவர்க்கு வியப்புக்குரிய செய்தி இல்லை. ஆனால், கால் இலட்சம் பெறுமானம் உள்ள வைர மோதிரமாக இருந்தால், கேட்பவரிடம் ஏற்படும் விளைவே வேறாக இருக்கும். அரைச் சவரன் கிடைப்பதற்கும், வைர மோதிரம் கிடைப்பதற்கும் செயல்படும் சக்தி ஒன்றுதான்.