நாம் பேசும் சொல்லெல்லாம் எதிரொலித்தாலும் அவை நம் காதில் விழுவதில்லை. வீட்டினுள் பேசினாலும் சுவரில் நம் ஒலிக்கு எதிரொலியுண்டு. எதிரொலி அதிவேகமாக வந்து நம் ஒலியுடனே கலந்துவிடுவதால், நமக்கு அது தனியாகத் தெரிவதில்லை. நமக்கும், சுவருக்கும் இடைவெளி அதிகமாக இருக்கும்பொழுது மட்டும் எதிரொலி தனித்துத் தெரிகிறது. வாழ்க்கைக்குப் பல ஆயிரம் சட்டங்களுண்டு. பெரிய சட்டங்கள், சிறிய சட்டங்கள், சட்டங்களுக்குட்பட்ட நடைமுறை ஆகியவை ஏராளம். அவை இடையறாது செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றன. முதல் சட்டம் பிறந்தவன் இறப்பான் என்பது. அடுத்த சட்டம் அவரவர் செய்ததை அவரவர் அனுபவித்தே தீரவேண்டும் என்பது.